இலங்கை சட்டவிரோத தொழிலாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் கைது
பிரதேசத்திலுள்ள இரண்டு உணவகங்களிலான நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்தின், பிளக்பூல் என்னுமிடத்தில், ஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அலுவலக குடிவரவு அமுல்படுத்தல் அதிகாரிகளால் ஐந்து சட்டவிரோத தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
![Sri Lankan illegal workers arrested in the UK](https://assets.publishing.service.gov.uk/media/5a611dab40f0b65266e7d457/s300_960_x_640_Illegal-Workers.jpg)
Sri Lankan illegal workers arrested in the UK
இந்த ஐவரில் 21 மற்றும் 22 வயதுடைய இருவர் இலங்கையர்களாவர் என்பதுடன் இவ்விருவரும் தங்களது நுழைவிசைவுக் காலத்தை மீறித் தங்கியிருந்ததுடன் சட்டவிரோதமாகவும் தொழில் செய்து வந்துள்ளனர். இவ்வனைவரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியமைக்காக இவ்விரண்டு வர்த்தக நிலையங்களுக்கும் சிவில் அபராத அறிவித்தல் வழங்கப்படும். வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பதாக சட்டபூர்வமாகத் தேவைப்படுத்தப்பட்ட பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளை வேலை கொள்வோர் சமர்ப்பிக்கத் தவறினால், தொழிலாளர் ஒருவருக்கு £10,000 எனும் வீதத்திலான ஒருஅபராதம் விதிக்கப்படும். உள்துறை அலுவலக குடிவரவு அமுல்படுத்தல் அணியிலிருந்தான கொலின் பெரிங்டன் தெரிவித்தது: “சட்டவிரோதமாகத் தொழில் செய்வது ஐக்கிய இராச்சியத்துக்கு சட்டவிரோதக் குடிவரவுகளை ஊக்குவிக்கின்றது. அதனாலேயே இதைப் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். நீங்கள் வியாபாரமொன்றை மேற்கொள்பவராயின், உங்களது ஊழியர்கள் மீது சரியான பரிசீலனை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளுதல் வேண்டும் அல்லது அதுவொரு கடுமையான அபராதம் செலுத்துவதில் முடிவடையலாம். ஊழியர்கள் மீது எத்தகைய பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்பதை அறிந்து கொள்வதற்கு விரும்பும் வியாபாரங்களுடன் பணியாற்றுவதற்கு நாம் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆனால் சட்டத்தை மீறுபவர்கள் தாம் கடுமையான அபராதங்களுக்கு முகங்கொடுப்பர் என்பதனை அறிந்திருத்தல் வேண்டும்.” இதற்கிடையே, சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கமர்த்தும் அயோக்கித்தன்மை கொண்ட வியாபாரங்களுக்கு எதிராக சிவில் தண்டனைகளை கடுமையாக்குவதற்காக முயற்சிக்கும் அதேவேளை, சட்டபூர்வமான வேலைகொள்வோர்களுக்காக நடைமுறை சம்பிரதாயங்களைக் குறைப்பது, கடந்த வாரத்தின் முற்பகுதியில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரேரணைகள், சட்டவிரோத குடியேறிகள் ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பது மற்றும் தொழில் செய்வது என்பதை மேலும் கடினமாக்குவதற்கும் மற்றும் அவர்களைத் துஷ்பிரயோகிக்கும் அயோக்கியத்தனமான வேலைகொள்வோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமான அரசாங்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். அத்தோடு, நாட்டின் குடிவரவுக் கொள்கையானது நன்மைகளுக்கான திட்ட முறைமை, சுகாதாரத் திட்ட முறைமை, வீட்டு வசதித் திட்ட முறைமை மற்றும் அரசாங்கத்தின் சேவைகளின் ஏற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளது. சட்ட விரோதக் குடியேறிகளை வேலைக்கமர்த்தும் வியாபாரங்களுக்கான சிவில் அபராதங்களைக் கடுமையாக்குவதற்கான பிரேரணைகளைக் கவனத்தில் கொள்வது, மீண்டும், மீண்டும் சட்டங்களை மீறும் வேலைகொள்வோர்களை இலக்காகக் கொண்டு தொழிலாளர் ஒருவருக்காக அதிகூடியதொரு தண்டனைத் தொகையாக £20,000 க்கு (இலங்கை நாணயத்தில் அண்ணளவாக 3.9 மில்லியன் ரூபாய்கள்) அதிகரிப்பதை உள்ளடக்குகின்றது. இந்தத் திட்டங்கள், இந்த வருடத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்ற குடிவரவு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக அமையும் என்பதோடு, அவை குடிவரவு சட்டத்தை மேலும் இறுக்கமானதாக்கி, ஐக்கிய இராச்சியத்தின் அமுல்படுத்தல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என்பதோடு ஐக்கிய இராச்சியத்தின் பொது சேவைகளை துஷ்பிரயோகிக்க முயற்சிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து முயலுவோர்களை கட்டுப்படுத்தும். இந்த மாதத்தின் முற்பகுதியில், கென்ற் பிரதேசத்தின் சிற்றிங்போர்ன் எனுமிடத்தில் கராஜ் ஒன்றின் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த மூன்று சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள், ஐக்கிய இராச்சியத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்காக குடிவரவு தடுப்புக்கு மாற்றப்பட்டனர்.